ஹைதராபாத்: எனக்கு தடை விதித்திருந்தால் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்காது என்று பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தெரிவித்துள்ளார்.
அண்மையில் கிளாஸ்கோவில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டிகளில் ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது.
கடந் ஆண்டு அக்டோபர் மாதம் தனது சகாக்களை இந்திய பேட்மிண்டன் லீக் போட்டிகளில் விளையாடவிடாமல் தடுத்ததாகக் கூறி ஜுவாலாவுக்கு வாழ்நாள் முழுவதும் விளையாட முடியாத தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்றதை பெருமையாக நினைக்கிறார் ஜுவாலா.

இது குறித்து அவர் கூறுகையில்,
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. பதக்கம் வெல்வது சாதாரண விஷயம் அல்ல. நான் காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு பதக்கங்கள் வென்றுள்ளேன். அதை நினைத்து பெருமைப்படுகிறேன். என் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் நன்றி. கடந்த முறை தங்கப் பதக்கம் வென்றோம். இருப்பினும் இம்முறை இறுதிப் போட்டியில் விளையாடினோம் என்பதை நினைத்து மகிழ்கிறேன்.
நாங்கள் தங்கம் வெல்ல விரும்பினோம். ஆனால் பரவாயில்லை. இந்த ஆண்டு மட்டும் நாங்கள் 3 பதக்கங்கள் வென்றுள்ளோம். இது ஒரு நல்ல வருடம். எனக்கு தடை விதித்திருந்தால் இந்த வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்காது என்றார்.