கவ்லூன்: ஹாங் காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து தகுதி பெற்றிருந்த நிலையில், மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் தோல்வியடைந்தார்.
ஹாங்காங்கின் கவ்லூன் நகரில் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இன்று, சிங்கப்பூர் வீராங்கனை ஜியாவ் லியாங்கை எதிர்கொண்டு வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இதையடுத்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால், ஹாங்காங் நாட்டின் ஷாங் யி-யுடன் மோதினார். முதல் செட்டை 8-21 என்ற கணக்கில் இழந்தார் சாய்னா. ஆனால் வீறுகொண்டு எழுந்த அவர், 2வது செட்டை 21-18 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார். வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. கடுமையாக போராடியபோதும், 19-21 என்ற கணக்கில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டார் சாய்னா.
இப்போட்டியில் வென்றிருந்தால், அரையிறுதியில் சிந்து மற்றும் சாய்னா நேருக்கு நேர் மோதியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். இரு ஹைதராபாத் பெண்களின் மோதலை ரசிக்க ரசிகர்கள் தயாராக இருந்த நிலையில் இத்தோல்வி அவர்களுக்கு அதிர்ச்சியளித்துவிட்டது.