கொரோனா லாக்டவுன்.. வீரர்களை மன ரீதியாகவும்.. பொருளாதார ரீதியாகவும் பாதிக்கும்.. பிரனோய்
டெல்லி: கொரோனாவைரஸ் பரவல் காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருப்பதால் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வீரர்கள், வீராங்கனைகள் பாதிக்கப்படுவர் என்று இந்திய பேட்மிண்டன் வீரர் எச்எஸ் பிரனோய் கூறியுள்ளார்.
ஏற்கனவே நிலைமை மோசமாகவுள்ளது. இந்த நிலை சீக்கிரம் மாறா விட்டால் பெரும் பாதிப்புகளை வீரர்களும், வீராங்கனைகளும் சந்திக்க நேரிடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். கொரோனாவைரஸ் பாதிப்பிற்கு இதுவரை உலகம் முழுவதும் 55,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
வீரர்கள் அனைவரும் வீட்டோடு முடங்கியிருக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பிரனோய் பிடிஐக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

மீண்டும் எப்போது சரியாகும்
எப்போது மீண்டும் நிலைமை சரியாகும் என்று தெரியவில்லை. எந்த அமைப்புக்கும் இப்போது போட்டியை நடத்தும் சாதகமான சூழல் நிலவவில்லை. யாருமே இந்த லாக்டவுனால் எதையும் செய்ய முடியாத நிலையில்தான் உள்ளனர். நிச்சயம் இது போட்டியை பாதிக்கும். விளையாட்டுக்கு நல்லதும் அல்ல. வீரர்களுக்கும் கூட மனதளவில், பொருளாதார ரீதியில் இது பாதிப்பையே கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்பான்சர்களுக்கும் கட்டாயம் பாதிப்பு
ஸ்பான்சர்களும் கூட இதனால் பாதிக்கப்படுவர். தற்போதைய சூழல் நிச்சயமாக பேட்மிண்டனுக்கும், அதேபோல மற்ற விளையாட்டுகளுக்கும் கூட பாதிப்பையே தரும். ஏற்கனவே வருவாய் குறைவாகவே உள்ளது. இது மேலும் நீடித்தால் நிச்சயம் வருமானம் பாதிக்கப்படும். விரைவில் இது சரியாகும் என்ற நம்பிக்கையில் உள்ளேன் என்றார் பிரனோய்.

மன நல பாதிப்பு வரும்
பிரனோய் மேலும் கூறுகையில், இந்த லாக்டவுனால் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறையில் இருக்கும் 80 சதவீதம் பேருக்கு மன ரீதியாக பல பாதிப்புகள் நிச்சயம் வரும். ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு மாதிரியான பாதிப்பையே தரும். ஆனால் இப்போதைக்கு அதிலிருந்து மீள முடியுமா என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

உடற்பயிற்சி செய்யுங்கள்
இந்த தடையை சாதகமான முறையில் எதிர்கொள்ள வேண்டும். நேர்மறையாக இதைப் பார்க்க வேண்டும். வேடிக்கைகளில் கவனத்தைத் திருப்ப வேண்டும். தொழில்முறை வீரர்களால் இதை நிச்சயம் சமாளிக்க முடியாதுதான். ஆனால் பாசிட்டிவாக இதை எதிர்கொண்டு கரையேற வேண்டும். உடற்பயிற்சிகளை விட்டு விடாதீர்கள். அது முக்கியம். தினசரி அதைச் செய்யுங்கள். அது மன ரீதியாகவும் நம்மை வலுவாக வைத்திருக்க உதவும் என்றார் பிரனோய்.


Click it and Unblock the Notifications