ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன்: கடைசி நேர பதற்றத்தில் தோல்வியடைந்த சாய்னா
லண்டன்: ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் அதிர்ச்சிகர தோல்வியை தழுவினார். கடைசி நேரத்தில் என்னுடைய குறி தவறியது. இதனால் ஏற்பட்ட பதற்றமே தோல்விக்கு காரணமாகிவிட்டது என்று கூறியுள்ளார் சாய்னா.
நூற்றாண்டு கால பாரம்பரியமும், கவுரவமும் மிக்க ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பெர்மிங்காம் நகரில் நேற்று நடைபெற்றது. இதில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.
உலக அளவில் 3வது இடத்தில் இருக்கும் சாய்னா இதற்கு முன்பு கடந்த 2010, 2013ஆம் ஆண்டுகளில் நடந்த இந்த போட்டிகளில் அரையிறுதிக்கு மட்டுமே முன்னேற முடிந்தது.
1980-ல் பிரகாஷ் படுகோனே, 2001-ல் கோபிசந்த்-க்கு அடுத்தபடியாக 3வதாக இந்தியர் ஒருவர் ஆல்-இங்கிலாந்து ஓபனில் பட்டம் பெறும் வாய்ப்பு சாய்னா நேவாலுக்கு இருந்தது.
இந்நிலையில், அரையிறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற ஸ்பெயின் நாட்டு வீராங்கனை கரோலினா மேரினுடன் இன்று சாய்னா விளையாடினார்.

அனல் பறந்த ஆட்டம்
இதில் தொடக்கத்தில் அபாரமாக ஆடிய சாய்னா முதல் செட்டை வசப்படுத்தினார். ஆனால் அடுத்த செட்டில் தடுமாறினார். ஒரு கட்டத்தில் 12-12 என்று சமனிலை கண்ட போதிலும் அதன் பிறகு எதிராளியின் கை ஓங்கியதால் 2-வது செட்டை பறிகொடுத்தார். இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் அனல் பறந்தது.

ஆக்ரோஷமான ஆட்டங்கள்
நம்ப முடியாத அளவுக்கு துள்ளி குதித்து விளையாடிய கரோலினா ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் ஆக்ரோஷமாக கத்தி குரல் எழுப்பினார். அதே சமயம் கரோலினாவின் ஆக்ரோஷத்தையும், அவரது ஆதிக்கத்தையும் கண்டு சாய்னா பதற்றமடைந்து விட்டார். பந்தை அடிக்கடி வெளியே அடித்து அதிகமான தவறுகளை செய்த சாய்னா கடைசியில் கோப்பையையும் கோட்டை விட்டார்.

அதிர்ச்சிகர தோல்வி
ஒரு மணி 2 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆனால், 21-16, 14-21 மற்றும் 7-21 செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி கரொலினா வெற்றி பெற்றார். சாய்னா நேவால் இதில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைப்பார் என பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

எளிதான வெற்றியல்ல
கரோலினா, சாய்னாவை தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு அவருக்கு எதிராக ஆடிய மூன்று ஆட்டங்களிலும் தோல்வியே கண்டிருந்தார். சாய்னாவை வீழ்த்தியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவரை வீழ்த்துவது அவ்வளவு எளிதானதல்ல. முதல் போட்டியில் எனக்கு பதற்றமாக இருந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு விளையாடினேன் என தெரிவித்தார் கரோலினா.

கடைசி நேரத்தில்
இதனிடையே கடைசி நேரத்தில் ஏற்பட்ட பதற்றமே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக கூறியுள்ளார் சாய்னா. போட்டியின் முடிவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வாய்ப்பை இழந்த சாய்னா
சர்வதேச மகளிர் தினத்தன்று வரலாற்று பக்கங்களில் இடம்பெறும் வாய்ப்பை சாய்னா இழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications