கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டிகள் பாட்மின்டன் பைனல்ஸ் போட்டிக்கு இந்திய அணி நுழைந்தது. இதன் மூலம் மற்றொரு பதக்கம் உறுதியாகி உள்ளது. அரை இறுதியில் சிங்கப்பூர் அணியை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கின்றன. இந்தியா இதுவரை 6 தங்கம் , 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 10 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பாட்மின்டனில் லீக் ஆட்டங்களில் இலங்கையை 5-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
அதைத் தொடர்ந்து பாகிஸ்தானை 4-0 என்றும், ஸ்காட்லாந்து அணியை 5-0 என ஒயிட்வாஷ் செய்தது. பின்னர், காலிறுதியில் மொரீஷியஸ் அணியை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. சிங்கப்பூர் அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்று, பைனல்ஸ்க்கு முன்னேறியுள்ளது.
முதலில் நடந்த கலப்பு இரட்டையரில் சாத்விக் ராங்கிரெட்டி, அஸ்விணி பொன்னப்பா ஜோடி 22-20, 21-18 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றுத் தந்தது. அடுத்த நடந்த ஆடவர் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த், 21-17, 21-14 என்ற கணக்கில் சுலபமாக வென்றார்.
மூன்றாவதாக நடந்த ஆடவர் இரட்டையரில் சாத்விக் ராங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் ஷெட்டி ஜோடி கடினமாக போராடி 21-17, 19-21, 12-21 என்ற செட்களில் தோல்வியடைந்தது. அதையடுத்து 2-1 என்று முன்னிலையை குறைத்தது சிங்கப்பூர். பின்னர் நடந்த மகளிர் ஒற்றையரில் சாய்னா நெஹ்வால் 21-8, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற, 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
இந்த காமன்வெல்த்தில் பாட்மின்டனில் முதல் முறையாக இந்தியா, ஒரு ஆட்டத்தில் மட்டும் வென்றுள்ளது. மற்றபடி அனைத்து ஆட்டங்களிலும், செட்களை இழக்காமல் வென்றது குறிப்பிடத்தக்கது.