காமன்வெல்த்: பாட்மின்டனில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி!
கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டிகள் பாட்மின்டன் போட்டியில் இலங்கை, பாகிஸ்தானை தொடர்ந்து ஸ்காட்லாந்து அணியையும் வென்று காலிறுதிக்கு இந்தியா முன்னேறியது.
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கின்றன. பளு தூக்குதலில், மீராபாய் சானு தங்கம், குருராஜா வெள்ளி, சஞ்சிதா சானு தங்கம், தீபக் லேதர் வெண்கலம் என்று இதுவரை நான்கு பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பாட்மின்டன் போட்டிகள் நேற்று துவங்கின. முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை 5-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-0 என வென்றது.

ஆடவர் இரட்டையரில் சாத்விக் ராங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, கலப்பு இரட்டையரில் ரித்விகா ஷிவானி காடே-பிரனவ் ஜெர்ரி சோப்ரா ஜோடி, ஆடவர் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த், மகளிர் ஒற்றையரில் சாய்னா நெஹ்வால் வென்றனர்.
இந்த நிலையில், இன்று மூன்றாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. இந்தப் போட்டியிலும் 5-0 என இந்தியா ஒயிட்வாஷ் வெற்றி பெற்றது. இதன் மூலம் கால் இறுதிக்கு முன்னேறியது.
இன்று நடந்த போட்டியில் முதலில் நடந்த மகளிர் ஒற்றையரில் சாய்னா நெஹ்வால், 21-14, 21-12 என்ற கணக்கில் வென்றார். அடுத்து நடந்த ஆடவர் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த 21-18, 21-2 என்று 31 நிமிடங்களில் வென்று அசத்தினார்.
மகளிர் இரட்டையரில் சிக்கி ரெட்டி, அஸ்வினி போபன்னா ஜோடி 21-8, 21-12 என்ற கணக்கில் வென்றது. ஆடவர் இரட்டையரில் சாத்விக் ராங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் ஷெட்டி ஜோடி 21-16, 21-19 என்ற கணக்கில் வென்று அசத்தியது. கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா அசத்தியது. பிரனவ் சோப்ரா, சிக்கி ரெட்டி ஜோடி 21-17, 21-15 என்ற செட்களில் வென்றது. மிகவும் வலுவாக உள்ள இந்திய அணி கால் இறுதிக்கு முன்னேறி உள்ளதால், பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது,


Click it and Unblock the Notifications