சிறந்த வளரும் வீராங்கனை சாய்னா - உலக பேட்மின்டன் சங்கம் அறிவிப்பு

சியோலில் நடந்த உலக பேட்மின்டன் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போட்டியில் கொரிய வீராங்கனை உள்ளிட்ட 3 பேர் இருந்தனர். இறுதியில் சாய்னா இந்தப் பெருமைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்தில்தான் உலகின் டாப் 10 வீராங்கனைகள் பட்டியலில் முதல் முறையாக நுழைந்தார் சாய்னா. தற்போது உலக தர வரிசையில் 10வது இடத்தில் இருக்கிறார் சாய்னா.
பெஜ்யிங் ஒலிம்பிக் போட்டியின் காலிறுதிப் போட்டியில் நுழைந்து சாதித்த சாய்னா, சைனீஸ் தைபே ஓபன், உலக ஜூனியர் சாம்பியன், காமன்வெல்த் இளையோர் விளையாட்டு ஆகியவற்றில் வெற்றி பெற்றார்.
வெற்றிகரமாக 2008ம் ஆண்டை முடிக்கவுள்ள நிலையில் சாய்னாவைத் தேடி உலக பேட்மின்டன் சங்கத்தின் இந்தப் புதிய பெருமை வந்து சேர்ந்துள்ளது.
இதுகுறித்து சாய்னா கூறுகையில், இது எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்போது அது கிடைத்து விட்டது. இது எனக்கு மேலும் சிறப்பாக செயல்படுவதற்கான ஊக்கத்தைத் தரும் என்றார் சாய்னா.
Story first published: Wednesday, December 7, 2011, 18:09 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications