மும்பை : ரோஹித் சர்மா தலைமையில் இந்திய டெஸ்ட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியாவில் நடக்க உள்ள இந்த தொடருக்கான விக்கெட் கீப்பர் யார் என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. கே எல் ராகுல் இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக சரியாக செயல்பட மாட்டார் எனக் கருதி ஸ்ரீகர் பாரத் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
ஆனால், பாரத் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும், உள்ளூர் போட்டிகளிலும் கடந்த ஓராண்டில் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் இந்தியா ஏ அணியில் பங்கேற்று அவர் ஆடிய போட்டியிலும் சொதப்பி இருக்கிறார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் அவர் 13 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இதில் கவலை அளிக்கும் விஷயம் அவர் ரன் குவிக்கவில்லை என்பதை விட ஒரு டெஸ்ட் போட்டியில் வெறும் 13 பந்துகள் மட்டுமே தாக்குப்பிடித்து நின்று இருக்கிறார். இதற்கு முன் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகளில் ஆடினார். அதில் 5 இன்னிங்க்ஸ்களில் 57 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக இடம் பெற்று இருக்கிறார் பாரத். கடந்த சில வாரங்கள் முன்பு நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், அவர் முழு நேர விக்கெட் கீப்பர் இல்லை. மேலும், இந்திய ஆடுகளங்களில் ஸ்பின் பந்துவீச்சை சமாளிக்க திறமையான விக்கெட் கீப்பர் தேவை. அந்த வகையில் ஸ்ரீகர் பாரத் சிறந்த தேர்வு தான். ஆனால், பேட்டிங்கில் அவர் நிலைமை மோசமாக உள்ளது.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் முதலில் இஷான் கிஷன் தான் அணியின் மாற்று விக்கெட் கீப்பராக இருந்தார். ஆனால், அவர் அப்போது தனக்கு களமிறங்கும் அணியில் வாய்ப்பு அளிக்கப்படாமல் இருப்பதில் அதிருப்தி அடைந்து மனச் சோர்வால் விலகுகிறேன் என அறிவித்து அணியில் இருந்து விலகினார். அவரை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தேர்வு செய்து இருக்கலாம். ஆனால், அவர் மீது பயிற்சியாளர் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அதனால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இஷான் கிஷனை அணியில் தேர்வு செய்யாமல், பாரத்துக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஆனால், அவர் பேட்டிங் சுமாராக இருக்கும் நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதுவே இந்திய அணிக்கு முதல் அடியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையை உணர்ந்து, கடைசி நேரத்தில் ராகுல் மீண்டும் விக்கெட் கீப்பிங் பணிக்கு திரும்பினாலும் திரும்பலாம்.