ஹாங்காங்: ஊபர் கோப்பை பாட்மின்டன் போட்டியில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
சர்வதேச பாட்மின்டன் போட்டிகளில் ஒன்றான தாமஸ் அண்ட் ஊபர் கோப்பை போட்டிகள் ஹாங்காங்கில் நடக்கிறது. இதில் மகளிர் அணிகளுக்கு இடையேயான ஊபர் போட்டிகள் துவங்கியுள்ளன.

இதில் ஏ பிரிவில் இந்தியா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் கனடாவிடம் 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் இன்று நடந்தது. இதில் 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதன் மூலம் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. அடுத்ததாக வலுவான ஜப்பான் அணியுடன் மோத உள்ளது.
இன்று நடந்த ஆட்டத்தில் சாய்னா நெஹ்வால் 21-14. 21-19 என்ற செட்களில் வென்றார். அதற்கடுத்து நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் மேகனா ஜக்கம்புடி, பூர்விஷா ராம் ஜோடி 13-21, 16-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
பின்னர் நடந்த ஒற்றையரில் வைஷ்ணவி ரெட்டி ஜக்கா 21-17, 21-13 என்ற கணக்கில் வெல்ல, இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்றது.
மற்றொரு இரட்டையரில் சன்யோகிதா கோர்படே, பிரஜக்தா சாவந்த் ஜோடி 21-19, 21-11 என்ற கணக்கில் வென்றது. மற்றொரு ஒற்றையரில் அனுரா பிரபுதேசாய் 21-6, 21-7 என்ற செட்களில் சுபலமாக வெல்ல, இந்தியா 4-1 என்ற கணக்கி்ல வென்றது.