ஜகார்த்தா : இந்திய பெண்கள் பாட்மிண்டன் அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் என எதிர்பார்த்த நிலையில், காலிறுதியில் தோற்று வெளியேறியுள்ளது.
இந்திய பெண்கள் பாட்மிண்டன் அணி காலிறுதியில் பலம் வாய்ந்த ஜப்பான் அணியை சந்தித்தது. இந்திய பாட்மிண்டன் அணியில் முன்னணி வீராங்கனைகளான பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் இருந்ததால், இந்திய அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இரண்டு ஒற்றையர் மற்றும் இரண்டு இரட்டையர் பிரிவு போட்டிகளில் ஆடிய இந்திய அணி, பி.வி.சிந்து ஆடிய ஒரே ஒரு ஒற்றையர் பிரிவு போட்டியில் மட்டுமே வென்று, மற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
ஒற்றையர் பிரிவு போட்டியில் பி.வி.சிந்து, யாமாகுச்சியை சந்தித்தார். இருவரும் மிகவும் கடினமாக ஆடிய இந்தப் போட்டியில் 21-18, 21-19 என வெற்றி பெற்றார் சிந்து.
மற்றொரு ஒற்றையர் பிரிவு போட்டியில், சாய்னா நேவால், ஒக்குஹாராவை சந்தித்தார். முதல் கேமில் தடுமாறிய சாய்னா, இரண்டாவது கேமில் கடும் போராட்டத்துக்கு பின் வென்றார். எனினும், இறுதியில் 11-21, 25-23, 16-21 என போட்டியில் தோல்வி அடைந்தார்.
இரட்டையர் பிரிவில், சிக்கி ரெட்டி, அராத்தி சாரா 15-21, 6-21 என படு தோல்வி அடைந்தனர். பி.வி.சிந்து, அஷ்வினி பொன்னப்பா பங்கேற்ற மற்றொரு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் 13-21, 12-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
இதனால், 1-3 என காலிறுதியில் தோல்வி அடைந்த இந்திய பெண்கள் பாட்மிண்டன் அணி பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.
பாட்மிண்டன் போலவே, துப்பாக்கி சுடுதலிலும் ஏமாற்றம் ஏற்பட்டது. நேற்று கலப்பு ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்ற அபூர்வி சன்டேலா, இன்று பங்கேற்ற 10m ஏர் ரைபிள் பிரிவு இறுதிச் சுற்று வரை முன்னேறினார். இதனால், மற்றுமொரு பதக்கம் கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இறுதிச் சுற்றில் ஐந்தாவது இடம் பிடித்து வெளியேறினார்.