ஜகர்தா: இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் கால்இறுதியில் இந்தியாவை சேர்ந்த சாய்னா நேவால் தோல்வியடைந்தார். முதல்நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா 24-22, 22-11 என்ற செட்களில் சாய்னாவை வீழ்த்தினார்.
இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் ஜகர்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், உள்ளூர் வீராங்கனையான பிட்ரியானியை சந்தித்தார்.
3 முறை சாம்பியனான சாய்னா நேவால் 21-11, 21-10 என்ற நேர்செட்டில் பிட்ரியானியை எளிதில் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 32 நிமிடம் தேவைப்பட்டது.
போட்டித் தரவரிசையில் 8ஆவது இடத்தில் இருக்கும் சாய்னா தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினின் கரோலினா மரினை சந்தித்தார். இது சாய்னாவுக்கு காலிறுதிச்சுற்று அக்னிப் பரீட்சையாக அமைந்தது.
கரோலினா உடன் சாய்னா 42 நிமிடங்கள் பலப்பரிட்சை நடத்தினார். இந்த போட்டியில் முதல் செட்டை கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்தும் அதனை சாய்னா தவறவிட்டார். இறுதியில் கரோலினா 24-22, 22-11 என்ற செட்களில் சாய்னாவை வீழ்த்தினார்.
இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் ஏற்கனவே இரட்டையர் பிரிவில் விளையாடிய இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 9-21, 18-21 என்ற நேர் செட்களில் சீனாவின் ஹுயாங் யாகியோங்-டங் ஜிங்வா ஜோடியிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து நேற்று வெளியேறியது.
ஆடவர் இரட்டையர் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 18-21, 13-21 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சங் ஹியூன்-ஷின் சியோல் ஜோடியிடம் தோல்வி கண்டது. சாய்னா மட்டுமே கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில் அவரும் தோல்வியை தழுவியுள்ளார்.