"ஜம்"மென்ற வெற்றியுடன் "ஜில்"லென்று வந்திறங்கினார் ஜ்வாலா கட்டா
ஹைதராபாத்: கனடாவில் நடந்த கனடா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இரட்டையர் பட்டத்தை வென்ற இந்தியாவின் ஜ்வாலா கட்டா ஹைதராபாத் திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள், பெற்றோர், நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அனல் பறக்கும் ஆட்டத்துக்குச் சொந்தக்காரர் ஜ்வாலா கட்டா. பேச்சிலும் அதுபோலத்தான். மனசுக்குப் பட்டதை படாரென்று போட்டு உடைத்து விடுவார்.
சர்ச்சைகள் பலவற்றில் அவர் பிசியாக இருந்தபோதும் கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்று அசத்தினார் ஜ்வாலா.

ஜ்வாலாவும், அஸ்வினி பொன்னப்பாவும் இணைந்து இறுதிப் போட்டியில் எளிதாக வென்று பட்டத்தைக் கைப்பற்றினர்.
இருவரும் இணைந்து கைப்பற்றிய 4வது சாம்பியன் பட்டம் இது. இந்த வெற்றிக்குப் பின்னர் ஹைதராபாத் திரும்பினார் ஜ்வாலா. அங்கு அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மிகவும் மகிழ்ச்சிகரமாக காணப்பட்ட ஜ்வாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், அஸ்வினியுடன் இணைந்து ஆடுவது புத்துணர்ச்சியாக உள்ளது. இந்த வெற்றி விசேஷமானது.
அடுத்து எங்களது இலக்கு ஒலிம்பிக் போட்டிதான். அதற்காக இப்போதே தயாராகி வருகிறோம் என்றார் ஜ்வாலா.
ஒம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications