ஜுவாலா கட்டாவுக்கு அடுத்த 'ஷாக்'.. டென்மார்க் போட்டியிலிருந்து டிஸ்மிஸ்!
டெல்லி: ஆயுள் தடையை எதிர்நோக்கியுள்ள பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது இந்திய பேட்மிண்டன் சங்கம். அவரது பெயர் டென்மார்க் ஓபன் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.
முதலில் சேர்க்கப்பட்டிருந்த அவரது பெயரை நேற்று நீக்கி விட்டது இந்திய பேட்மிண்டன் சங்கம். அடுத்த வாரம் இந்தப் போட்டித் தொடர் நடைபெறுகிறது.
பெயர் நீக்கம் குறித்து ஜுவாலாவுக்கு சொல்லக் கூட இல்லையாம். இதனால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஜுவாலா கட்டாவுக்கு ஆயுள் தடையை விதிக்க பேட்மிண்டன் சங்கத்திற்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்துள்ளது. அதை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவரது பெயரை நீக்கியுள்ளது பேட்மிண்டன் சங்கம்.

அஸ்வினியுடன் இணைந்து ஆட
டென்மார்க் ஓபன் போட்டியில் அஸ்வினி பொன்னப்பாவுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் மோதுவதாக இருந்தார் ஜூவாலா.

அஸ்வினிக்கும் ஆப்பு..
ஆனால் ஜுவாலா கட்டாவை நீக்கிய இந்திய பேட்மிண்டன் சங்கம், கூடவே அஸ்வினியையும் நீக்கி டபுள் ஷாக் கொடுத்துள்ளது.

ரொம்ப ஷாக்கா இருக்கு..
இதுகுறித்து ட்விட்டரில் ஜுவாலா எழுதுகையில், மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.. அதை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை.. என்னை விலக்கியுள்ளனர்... என்னிடம் சொல்லக் கூட இல்லை... என்ன நிர்வாகம் இது... தயவு செய்து ஏன் என்று எனக்கு விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜுவாலா.

ஆயுள் தடைக்குப் பரிந்துரை
ஜுவாலா கட்டா, இந்தியன் பேட்மிண்டன் லீக் தொடரி்ல நடந்து கொண்ட விதத்தைத் தொடர்ந்து அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணையின் இறுதியில், ஜுவாலாவுக்கு ஆயுள் கால தடை விதிக்க வேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications