ரியோ டி ஜெனிரோ: கர்ணம் மல்லேஸ்வரி முதல், சாக்ஷி மாலிக் வரை, இந்தியாவின் மானத்தை தக்க நேரத்தில் காப்பாற்றியதில் வீராங்கனைகளுக்கு முக்கிய இடம் எப்போதும் உண்டு.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரிக்குத்தான் உண்டு. 2000மாவது ஆண்டில், சிட்னி ஒலிம்பிக்கில் மல்லேஸ்வரி இந்த சாதனையை படைத்தார். வெண்கலம் வென்றார்.

இதன்பிறகு, லண்டனில், 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில், வெண்கலம் வென்று முத்திரை பதித்தார் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்.
அதே ஒலிம்பிக் தொடரில், மற்றொரு இந்திய வீராங்கனையும் சாதித்தார். அவர்தான் சாய்னா நேவால். வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல், இந்திய பேட்மின்டன் பங்கேற்பாளர் என்ற பெருமையை அவர் தட்டி சென்றார்.
இதன்பிறகு நடப்பு ரியோ ஒலிம்பிக்கில், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கம் தட்டிச் சென்று பெருமை சேர்த்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த மொத்தமே 4 வீராங்கனைகள்தான் இதுவரை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளனர். ஆனால் மானத்தை காப்பாற்றும் மகத்தான நேரத்தில் அவர்கள் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர்.