சாதனை.. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5வது இந்திய வீராங்கனை சிந்து!
ரியோ டி ஜெனிரோ: ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இந்தியா சார்பில் 4 பெண்கள் மட்டுமே பதக்கம் வென்ற நிலையில், பி.வி.சிந்து 5வதாக வெள்ளிப் பதக்கம் பெற்று அந்த கவுரவ பட்டியலில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஒலிம்பிக்கில் இந்தியா சாதிப்பது அரிது. அதனினும் அரிது பெண்கள் பதக்கம் வென்றது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரிக்குத்தான் உண்டு. 2000மாவது ஆண்டில், சிட்னி ஒலிம்பிக்கில் மல்லேஸ்வரி இந்த சாதனையை படைத்தார். வெண்கலம் வென்றார்.
இதன்பிறகு, லண்டனில், 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில், வெண்கலம் வென்று முத்திரை பதித்தார் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்.
அதே ஒலிம்பிக் தொடரில், மற்றொரு இந்திய வீராங்கனையும் சாதித்தார். அவர்தான் சாய்னா நேவால். வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல், இந்திய பேட்மின்டன் பங்கேற்பாளர் என்ற பெருமையை அவர் தட்டி சென்றார்.
இதன்பிறகு நடப்பு ரியோ ஒலிம்பிக்கில், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கம் தட்டிச் சென்று பெருமை சேர்த்தார். அவர்தான் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனையும் ஆவார்.
இந்நிலையில், பி.வி.சிந்து தற்போது வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் 5வது வீராங்கனை என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார்.
நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த இரு பதக்கங்களும், மகளிரால் கிடைக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications