சென்னை: ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற பிவி சிந்து, சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று இரவு வெளியிட்ட அறிக்கை:

31வது உலகப் புகழ் பெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பிரேசில் நாட்டில் உள்ள "ரியோ டே ஜெனிரியோ" நகரத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்ட வீரர்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை "பி.வி.சிந்து" தனது அனைத்து போட்டிகளிலும் வெற்றி வாகை சூடி, விறுவிறுப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இன்று இந்திய மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இறகுப்பந்து இறுதிப்போட்டியில் உலகளவில் முதல் இடம் வகிக்கும் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினிடம் தோல்வி அடைந்து "வெள்ளிப்பதக்கம்" வென்றுள்ளார்.
ஒலிம்பிக் பதக்க வேட்டையில் அசத்திய பிவி சிந்து- படங்கள்
பி.வி.சிந்துவின் காலிறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டியை நான் தொலைக்காட்சியின் வாயிலாக கண்டேன், அவரது ஆட்டம் மிகவும் சிறப்பாகவும், துல்லியமாகவும் அமைந்திருந்தது.
தன்னம்பிக்கையோடு விளையாடி இந்தியாவிற்கு இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றுத்தந்த "பி.வி.சிந்து", மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்ற "சாக்க்ஷி மாலிக்" ஆகிய இந்திய வீர மங்கைகள் இருவருக்கும் எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.