டெல்லி: சொந்த மண்ணில் கோப்பை வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென், இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றிலேயே வெளியேறினார். இவரது தோல்வியுடன், இத்தொடரில் இந்தியாவின் ஒட்டுமொத்த சவாலும் முடிவுக்கு வந்துள்ளது.
இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், சீன தைபே நாட்டைச் சேர்ந்த லின் சுன்-யி (Lin Chun-yi) உடன் லக்ஷ்யா சென் மோதினார்.

ஆரம்பத்தில் லக்ஷ்யா சென் மிகச்சிறப்பாக விளையாடினார். மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், முதல் செட்டை 21-17 என்ற கணக்கில் கைப்பற்றி நம்பிக்கையளித்தார். லக்ஷ்யா சென்னின் வேகம் எதிராளிக்குப் பெரும் சவாலாக இருந்தது.
ஆனால், இரண்டாவது செட்டில் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது. மனதளவில் மிகவும் வலிமையாக இருந்த லின் சுன்-யி, தனது உத்திகளை மாற்றி லக்ஷ்யா சென்னை திணறடித்தார். நீண்ட ரேலிகளை விளையாடி லக்ஷ்யாவைத் தவறு செய்ய வைத்தார். இதனால் 2-வது செட்டை 13-21 என லக்ஷ்யா இழந்தார்.
வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் அனல் பறந்தது. ஆரம்பத்தில் 4-1 என லக்ஷ்யா முன்னிலை பெற்றார். ஆனால், நேரம் செல்லச் செல்ல லக்ஷ்யா சென் உடல் சோர்வடைந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. கடைசி நேர நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் 18-21 என அந்த செட்டையும் இழந்தார்.
சுமார் 1 மணி நேரம் 8 நிமிடங்கள் நீடித்த இந்த மாரத்தான் யுத்தத்தில் 21-17, 13-21, 18-21 என்ற கணக்கில் லக்ஷ்யா சென் தோல்வியைத் தழுவினார். இந்தியா ஓபன் சூப்பர் 750 தொடரில் இந்தியாவின் கடைசி நம்பிக்கையாக இருந்த லக்ஷ்யா சென்னும் வெளியேறியதால், இந்தியாவின் கோப்பை எதிர்பார்ப்பும் முடிவுக்கு வந்தது. அரையிறுதிக்கு ஒரு இந்திய வீரர் கூட தகுதி பெறாதது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கடந்த 2025 சீசன் இந்திய வீரர்களுக்குச் சோதனையாக அமைந்த நிலையில், 2026-ன் தொடக்கமும் சொந்த மண்ணில் தோல்வியுடன் அமைந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 12-ம் நிலை வீரரான லின் சுன்-யி, தனது பொறுமையான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.