டெல்லி: ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பி.வி சிந்துவிற்கு டிவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் உள்ளிட்டோரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
ரியோ டி ஜெனிரோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சிந்துவும், ஜப்பானின் நோசோமி ஓகுராவும் மோதின. இதில் முதல் செட்டை 21-19 என கைப்பற்றினார் சிந்து. அடுத்த செட்டை 21-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளார்.

இந்நிலையில், பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரணாப் வாழ்த்து:
பி.வி.சிந்துவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள், இறுதி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
மோடி வாழ்த்து:
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பி.வி.சிந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இறுதி போட்டியில் வெற்றி பெற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹரியான முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தலைவர் அமித்ஷா, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், ஆமிர்கான், துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, ஆகியோரும் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த், தமிழிசை வாழ்த்து:
ரியோ ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற PV சிந்து அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தங்கப்பதக்கம் வென்று நம் தாய்நாட்டிற்கு பெருமை தேடி தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். அதேபோல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் சிந்துவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.