பெங்களுர்: நான் 3 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என ஒருபோதும் நினைத்த்து கிடையாது என இந்திய பேட்மிண்டன் வீராங்கை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் பிரேசிலில் ரியோ ஒலிம்பிக் நடைபெறுகிறது. இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்பதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுகிறார். சாய்னா கடந்த 2008-ம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதல்முறையாக பங்கேற்றார். இதையடுத்து 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் சாய்னா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

மேலும், சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை சாய்னா நேவால் கைப்பற்றி அசத்தினார். அவரை கவுரவப்படுத்தும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் அவருக்கு கார் ஒன்றை நேற்று முன்தினம் பரிசாக வழங்கியது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாய்னா நேவால் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது: நான் 3 ஒலிம்பிக்கில் கலந்து கொள்வேன் என ஒரு போதும் நினைத்ததில்லை. விளையாட தொடங்கிய கால கட்டத்தில், ஒரு ஒலிம்பிக்கில் கூட கலந்து கொள்வேன் என்று நினைத்தது கிடையாது. கடந்த முறை லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றேன். இந்த ஒலிம்பிக்கில் அதை விட சிறந்த முயற்சியை வெளிப்படுத்தி, நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்று கூறினார்.