பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடிய பி.வி.சிந்து, ஜப்பானின் ஒக்குஹாரா-விடம் தோல்வியடைந்தார். இந்த ஆண்டில், மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார் சிந்து.
நேற்றைய இறுதிப் போட்டியில், ஒக்குஹாரா-வின் அதிரடியான ஆட்டம் ஆட, அதை சமாளிக்க முடியாத சிந்து எளிதில் தோல்வியைத் தழுவினார். சுமார் ஐம்பது நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் 21-15, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக சிந்துவை வீழ்த்தினார் ஒக்குஹாரா.

முதல் கேமில் துவக்கம் முதல் புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த ஒக்குஹாரா-வை வீழ்த்தி முன்னிலை பெற முயன்றார் சிந்து. எனினும், 21-15 என்ற நிலையில் முதல் கேமை இழந்தார், சிந்து. இரண்டாவது கேமில், ஒரு கட்டத்தில் 11-9 என்ற நிலையில் முன்னிலை பெற்ற சிந்து தொடர்ந்து அதை தக்க வைக்க முடியவில்லை. பின்பு, 18-18 என்ற சம நிலையை எட்டியது ஆட்டம். அதன் பின் ஒக்குஹாரா தொடர்ந்து மூன்று புள்ளிகளை அதிரடியாக பெற்று, ஆட்டத்தை தன் வசமாக்கினார்.
சிந்து இதுவரை ஒக்குஹாராவை 11 முறை சந்தித்துள்ளார். அதில் 5 வெற்றிகளும், 6 தோல்விகளும் கிடைத்துள்ளன. இந்த ஆண்டில் இந்தியா ஓபன் மற்றும் காமன்வெல்த் கேம்ஸ் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்து தங்கப்பதக்கம் மற்றும் பட்டம் வெல்லும் வாய்பை நழுவவிட்டார். அதை தொடர்ந்து, மூன்றாவது வாய்ப்பாக வந்த தாய்லாந்து ஓபன் தொடரிலும் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடித்துள்ளார்.
இந்த தாய்லாந்து ஓபன் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்களில் சிந்து மட்டுமே சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். மற்றவர்கள், முதல் மற்றும் இரண்டாம் சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இந்திய பாட்மிண்டனை பொறுத்தவரை, ஆண்கள் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், மற்றும் பெண்கள் பிரிவில் பி.வி.சிந்து ஆகியோர் மட்டுமே தற்போது சிறப்பாக ஆடி வருகின்றனர். சாய்னா நேவால் காயம் மற்றும் பார்ம் காரணங்களால் இந்த ஆண்டு பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை. தற்போது மூன்றாவது ரேங்க்கில் இருக்கும் சிந்து, தொடர்ந்து பட்டங்களை பெற்றால் முதல் ரேங்க்கை எட்டிப்பிடிக்கலாம்.