நான்ஜிங் : உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து படு சாதாரணமாக ஆடி தோல்வியைத் தழுவினார்.
மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், சிந்து மட்டுமே நம்பிக்கையளிக்கும் வகையில் இறுதி வரை முன்னேறியிருந்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரிலும் சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார், என்றாலும், அதில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற்றார்.
இறுதிப் போட்டியில் பி.வி.சிந்துவும், ஸ்பெயினின் மரீனும் மோதினர். ஏற்கனவே ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் இருவரும் மோதினர். அதில் மரீன் வென்றிருந்தார். இந்த நிலையில் இந்த மோதல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
இன்று நடந்த இறுதிப் போட்டியில் வழக்கமான போராளி சிந்துவைக் காண முடியவில்லை. மாறாக சாதாரணமான முறையிலேயே அவரது ஆட்டம் இருந்தது. இறுதியில் 21-19, 21-10 என்ற நேர் செட்களில் மரீன் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார்.
முதல் செட்டில் சற்றே போராடிய சிந்து, 2வது செட்டில் சுத்தமாக போராட்டத்தை விட்டு விட்டார். மிகவும் சாதாரணமாக இருந்தது அவரது ஆட்டம். தொடர்ந்து 2வது முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியுற்றுள்ளார் பி.வி.சிந்து.