பாரிஸ் : பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுத் தொடரில் இந்திய வீரர் நிதேஷ்குமார் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் நடப்பு தொடரில் இந்தியா இரண்டாவது தங்கம் வென்று இருக்கிறது. ஆடவர் எஸ் எல் 3 பேட்மிண்டன் பிரிவில் நிதிஷ்குமார் பங்கேற்றார்.
இதில் இறுதிப் போட்டி வரை வந்த நித்தேஷ் குமார் பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தலை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே நிதேஷ்குமார் அதிரடியாக விளையாடி முதல் செட்டை 21க்கு 14 என்று கணக்கில் கைப்பற்றினார்.

இதனை அடுத்து இரண்டாவது செட்டை கைப்பற்ற நிதேஷ் குமார் போராடினாலும் சுதாரித்துக் கொண்டு இரண்டாவது செட்டை 21 க்கு 18 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனை அடுத்து மூன்றாவது செட்டை யார் கைப்பற்றுவார்களோ அவர்கள் தான் சாம்பியன் என்ற நிலைக்கு போட்டி சென்றது. இதில் இரண்டு வீரர்களுமே கடுமையாக போராடி ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற பாணியில் விளையாடினர்.
இதனால் மூன்றாவது செட் பரபரப்பாக இருந்தது. இதனை அடுத்து இதில் 23 க்கு 21 என்ற கணக்கில் நிதேஷ் குமார் கைப்பற்ற அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. இதன் மூலம் பாரிஸ் பாராலிம்பிகில் அவெனி லெக்காதாவுக்கு பிறகு தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். எஸ் எல் 3 பிரிவு என்பது காலில் குறைபாடு உள்ளவர்கள் பங்கேற்கும் போட்டி ஆகும்.
இதனால் இந்த பிரிவில் பேட்மிண்டின் கோர்ட்டில் பாதி அகலம் தான் பயன்படுத்தப்படும். எஸ் எல் 3 பேட்மிண்டன் பிரிவில் இந்தியா டோக்கியோ பாரா ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கமும் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்த நிலையில் தற்போது பாரிஸ் பாரா ஒலிம்பிக்கிலும் இந்தியா தங்கப்பதக்கம் வென்று இருக்கிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நித்தேஷ்குமார் ரயில் விபத்து ஒன்றில் சிக்கி தனது காலை இழந்து பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். எனினும் தன்னுடைய விடாமுயற்சியை கைவிடாத நிதேஷ்குமார் இந்தியாவில் உள்ள பிரதான கல்வி நிறுவனமான ஐஐடியில் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இதனை அடுத்து 2013 ஆம் ஆண்டு ஐஐடி மண்டியில் இணைந்து அங்கு தன்னுடைய படிப்பை தொடங்கினார்.
அப்போதுதான் பேட்மிண்டன் மீது நிதேஷ் குமாருக்கு ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. ஐஐடியில் உள்ள பேட்மிண்டன் அகாடமியில் பயின்று பாரா பேட்மிண்டன் பிரிவில் சாதனை படைக்க தொடங்கினார். 2016 ஆம் ஆண்டு பாரா நேஷனல் சாம்பியன்ஷிப் தொடரில் ஹரியானா அணி சார்பாக நிதேஷ் குமார் பங்கேற்றார். 2017 ஆம் ஆண்டு அயர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பாரா பேட்மிண்டன் பிரிவில் பட்டம் வென்ற நிதேஷ்குமார். அதன் பிறகு பல்வேறு போட்டிகளில் அசத்தியிருக்கிறார்.
ஆசியா பாரா பேட்மிண்டன், பாரா பேட்மிண்டன் வேர்ல்ட் சர்க்யூட் போன்ற தொடர்களில் எல்லாம் நிதேஷ் குமார் பங்கேற்று இருந்திருக்கிறார் இந்த நிலையில் பாராலிம்பிக்கில் அவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். வாழ்க்கையில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை தாண்டி சாதனை படைக்க முடியும் என்பது நிதேஷ் குமார் வாழ்க்கையில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடமாகும்.