சென்னை: ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் உலகம் முழுவதும் ஒலிம்பிக் தொடர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 33வது ஒலிம்பிக் தொடர் பாரிஸ் நகரில் வரும் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வடை நடக்கவுள்ளது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் இம்முறை எத்தனை பதக்கங்களுடன் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பேட்மிண்டனை பொறுத்தவரை இந்தியாவின் நம்பிக்கையாக பிவி சிந்து இருக்கிறார். ஏனென்றால் இதுவரை பேட்மிண்டன் பிரிவில் இந்தியா சார்பாக 3 பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளது. அதில் 2 பதக்கங்களை பிவி சிந்து வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பிவி சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று அசத்தினார். இம்முறை தங்கப் பதக்கம் வெல்வதற்காக தீவிரமாக இருக்கிறார்.

ஆனால் பிவி சிந்துவின் வயது அவருக்கு சில பிரச்சனைகளை கொடுத்து வருகிறது. 29 வயதாகும் பிவி சிந்து, கடந்த சில ஆண்டுகளாக காயங்களால் அவதியடைந்து வருகிறார். ஆனால் 5 முறை பிடபிள்யூஎஃப் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் கேம்ஸில் தங்கம், வெள்ளி, வெண்கலம், ஆசியப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலம் வென்ற பிவி சிந்துவுக்கு நிச்சயம் கடினமான இருக்காது என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பது குறித்து பிவி சிந்து பேசுகையில், ஒலிம்பிக் தொடரில் 3வது பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற எண்ணமே எனக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கிறது. இம்முறையும் தங்கப் பதக்கத்தை வெல்வதே இலக்கு. என்னை பொறுத்தவரை ஒலிம்பிக் தொடரில் 200 சதவிகிதம் உழைப்பை கொடுத்து முயற்சிக்க போகிறேன்.
இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக் தொடர்களில் மூன்று பதக்கங்களை வெல்வது ஜோக் கிடையாது என்றும் கூறியுள்ளார். கடந்த 3 ஒலிம்பிக் தொடர்களிலும் இந்திய வீராங்கனைகள் 3 பதக்கங்களை வென்றுள்ளனர். இதனால் 4வது முறையாக தொடர்ந்து பதக்கத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அரங்கில் இந்திய பேட்மிண்டன் மீதான கவனத்தை திருப்பிய பிவி சிந்து, இம்முறை மீண்டும் பதக்கம் வெல்வாரா என்பதும், இந்தியாவின் ஆதிக்கம் பேட்மிண்டனில் தொடருமா என்பதும் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. அதேபோல் மகளிர் ஒற்றை பிரிவில் இந்தியா சார்பாக பிவி சிந்து மட்டுமே தகுதி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.