உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்... இரண்டாவது சுற்றில் பிரனாய், சமீர் வர்மா!
நான்ஜிங்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரனாய் மற்றும் சமீர் வர்மா ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங்கில் துவங்கியுள்ளது. இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா, எச்.எஸ். பிரனாய் அபாரமாக வென்றனர்.
உலகத் தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள பிரனாய் 21-12, 21-11 என்ற செட்களில் நியூசிலாந்தின் அபினவ் மனோடாவை வென்றார். இரண்டாவது சுற்றில் பிரேசிலின் யோகோர் கோயல்ஹோ டி ஓலிவீராவை சந்திக்கிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சமீர் வர்மா 21-13, 21-10 என்ற செட்களில் பிரான்சின் லூகான் மோரிஸ் கோர்வீயை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள சீனாவின் லின் டானை சந்திக்கிறார் சமீர் வர்மா.

சாய் பிரனீத் முன்னேறினார்
தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள தென்கொரியாவின் சான் வான்ஹோ விலகியதால், பி. சாய் பிரனீத் விளையாடாமலேயே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 2வது சுற்றில் ஸ்பெயினின் லூயிஸ் என்ரிக் பெரீராவை சந்திக்கிறார் சாய் பிரனீத். உலகத் தரவரிசையில் 5வது இடத்தில் இருக்கும் கிடாம்பி ஸ்ரீகாந்த், முதல் சுற்றில், அயர்லாந்தின் நாட் நூயெனை சந்திக்கிறார்.

சாய்னா, சிந்து
மகளிர் ஒற்றையரில் முதல் சுற்றில் இருந்து இந்தியாவின் பிவி சிந்து, சாய்னா நெஹ்வால் ஆகியோருக்கு பை அளிக்கப்பட்டுள்ளது. 2-வது சுற்று ஆட்டத்தில் துருக்கியின் அலியா டெமிர்பாகை சந்திக்கிறார் சாய்னா நெஹ்வால். மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தோனேசியாவின் பிட்ரியானியை சந்திக்கிறார் பி.வி. சிந்து.

2வது சுற்றில் ஆத்ரி, சுமீத்
ஆடவர் இரட்டையரில் மனு ஆத்ரி, பி. சுமீத் ரெட்டி ஜோடி 21-13, 21-18 என பல்கேரியாவின் நிகோலோவ், ரூசேவ் ஜோடியை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

கலக்கும் ஜோடிகள்
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் பிரனவ் ஜெர்ரி சோப்ரா, என். சிக்கி ரெட்டி ஜோடி, சாத்விக்ராஜ் ராங்கிரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி மற்றும் சவுரப் சர்மா, அனோஷ்கா பரீக் ஜோடி ஆகியவை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின.


Click it and Unblock the Notifications