டெல்லி: ரியோடி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் வரலாற்றில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை ஒருவர் முதல் முறையாக இறுதிப் போட்டியில் பங்கேற்றார் என்பதை சாதித்தவர் சிந்துதான். அரை இறுதியில் ஜப்பான் வீராங்கனையை சிந்து வீழ்த்திய போதே வெள்ளியோ தங்கமோ உறுதி என்றானது.
இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் மரினை எதிர்கொண்டு அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சிந்து. அதுவும் மரினுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தி முதல் செட்டை அட்டகாசமாக கைப்பற்றினார் சிந்து.
ஆனால் 2-வது சுற்றில் தடுமாறிய சிந்து செட்டை இழந்தார். 3-வது சுற்றில் தொடக்கத்தில் பின் தங்கினாலும் பின்னர் சரமாரியாக மரினுடன் மல்லுக்கட்டினார் சிந்து. கடைசியில் நூலிழையில் தங்கப் பதக்கத்தை இழந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்துவிட்டார் சிந்து.
நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது 2-வது பதக்கம். ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு இதுவே முதல் பதக்கம்.
வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.