காமன்வெல்த் போட்டியில் இந்தியா அதிக பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்க வேண்டாம்.. கோபிசந்த் கருத்து
மும்பை: கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள 2026 காமன்வெல்த் போட்டிகளில் இருந்து பேட்மிண்டன் மற்றும் இதர முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தனது பதக்க எதிர்பார்ப்புகளை மிகவும் யதார்த்தமாக வைத்திருக்க வேண்டும் என்று இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு அதிக பதக்கங்களைப் பெற்றுத்தரும் முக்கிய விளையாட்டுகளில் ஒன்றாக பேட்மிண்டன் விளங்கி வந்தது. இந்த நிலையில், இதன் நீக்கம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையை கணிசமாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவினங்களைக் குறைக்கும் நோக்கில், போட்டிகளின் அளவை குறைக்க அமைப்பாளர்கள் முடிவு செய்ததால், இந்தியாவின் வெற்றிகரமான விளையாட்டுகளில் ஒன்றான பேட்மிண்டன் உட்பட பல போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.


காமன்வெல்த் போட்டிகள் நீண்ட காலமாகவே இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு சாதகமான ஒரு களமாக இருந்து வந்துள்ளன. பல ஆண்டுகளாக சாய்னா நேவால், கிடம்பி ஸ்ரீகாந்த், பருபள்ளி காஷ்யப், பி.வி. சிந்து மற்றும் லக்ஷ்யா சென் போன்ற நட்சத்திர வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்த விளையாட்டில் இந்தியா ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்க உதவினர். ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு போட்டிகளில் பதக்கங்களை வெல்வது இந்திய அணியின் வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.
இருப்பினும், கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் போட்டிகள் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கப்போகின்றன. பட்ஜெட் மற்றும் மைதானக் கட்டுப்பாடுகள் காரணமாக போட்டிகளின் அளவை குறைக்க அமைப்பாளர்கள் முடிவு செய்ததால், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பேட்மிண்டன் இம்முறை கைவிடப்பட்டுள்ளது. இந்த முடிவு தேசிய தலைமை பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் உட்பட இந்திய பேட்மிண்டன் சமூகத்தினர் பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் 2026 முன்னிட்டு, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் பேசிய கோபிசந்த், "எங்களுக்கும், ஒட்டுமொத்த பேட்மிண்டன் சமூகத்திற்கும் காமன்வெல்த் போட்டிகள் எப்போதுமே ஒரு முக்கியமான தொடர் ஆகும். கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள போட்டிகளில் இருந்து பேட்மிண்டன் நீக்கப்பட்டுள்ளது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய தொடருக்கான முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்ட போதிலும், 2030 ஆம் ஆண்டில் அகமதாபாத் இப்போட்டிகளை நடத்தும்போது பேட்மிண்டன் மீண்டும் சேர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் நகரமாக அகமதாபாத் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்திய பேட்மிண்டன் அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு இந்த விளையாட்டு மீண்டும் சேர்க்கப்படலாம் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் பலம் குறித்து பேசிய கோபிசந்த் "இந்திய வீரர்கள் காமன்வெல்த் போட்டிகளில் பாரம்பரியமாகவே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர், தற்போதும் அவர்கள் முன்பை விட வலிமையுடன் உள்ளனர். இதனால், இந்த விளையாட்டில் நாங்கள் தொடர்ந்து பதக்கங்களை வெல்வோம் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.
"பேட்மிண்டன் என்பது பல்வேறு வயதினரையும், பல நாடுகளைச் சேர்ந்த மக்களையும் கவரும் ஒரு பிரபலமான விளையாட்டாகும். எனவே, இது காமன்வெல்த் போட்டிகளுக்கு ஒரு மதிப்புமிக்க விளையாட்டு என்று நாங்கள் நம்புகிறோம். இதுவே எங்களது கருத்து, காமன்வெல்த் போட்டிகள் குழு இதை பரிசீலித்து, எதிர்கால போட்டிகளில் பேட்மிண்டனை சேர்க்கும் என்று நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.இதனால் இந்திய வீரர்கள் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பிடபிள்யூஎஃப் உலக சாம்பியன்ஷிப் மற்றும் செப்டம்பர் இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள 2026 ஆசிய போட்டிகளில் பங்கேற்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications

