ஐதராபாத் : பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவும் தொழிலதிபர் வெங்கட சாயும் கடந்த 22 ஆம் தேதி திருமணம் செய்து முடித்தார்கள். இந்த நிலையில் பிவி சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது.இதில் நாடு முழுவதும் இருந்து பல விவிஐபிக்கள் பங்கேற்றார்கள்.
குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் பலரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிவி சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் செல்லும் வழக்கத்தை வைத்துக் கொள்ளாத நடிகர் அஜித்குமார் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் வந்து பிவி சிந்துவை வாழ்த்தினார்.

நடிகர் அஜித், மனைவி ஷாலினி மற்றும் அவருடைய மகன், மகள் ஆகியவர்களுடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். அஜித்தை பார்த்தவுடன் அங்கு இருந்த முக்கிய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வரவேற்றனர். குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் தாடியுடன் இருந்த நிலையில் தற்போது தாடியை முழுமையாக எடுத்து வேறு ஒரு லுக்கில் கோட் சூட் உடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.
இதனை அடுத்து அஜித் பிவி சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அஜித்தும் ஒரு விளையாட்டு வீரர் என்பதால் பிவி சிந்துவின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று அவரை வாழ்த்தியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவில் பல உச்ச நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குறிப்பாக நடிகர் சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
இதைப் போன்று பிரபல நடிகர் நாகா அர்ஜுனா மற்றும் அவருடைய மகன் நாக சைதன்யா மருமகள் சோபிதா ஆகியோர் பிவி சிந்துவின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இதை போன்று பிரபல நடிகை மிருணாள் தாக்கூரும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பிவி சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிவி சிந்து அணிந்திருந்த நெக்லஸ் மற்றும் உடை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவின் தங்க மகளை வாழ்த்த பல நட்சத்திரங்களும் ஹைதராபாத்துக்கு படையெடுத்து வந்திருந்தனர்.