ஜக்கார்டா: இந்தோனேசியா மாஸ்டர்ஸ் 2026 பேட்மிண்டனில் வெற்றி பெற்றதன் மூலம் பி.வி. சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் 500 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார். சிந்துவின் வெற்றியோடு, ஆண்கள் பிரிவில் லக்ஷயா சென் மற்றும் ஸ்ரீகாந்த் கிடாம்பி ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர்.
ஜக்கார்டாவில் நடைபெற்ற சூப்பர் 500 தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பி.வி. சிந்து டென்மார்க்கின் லைன் கியர்ஸ்பெல்ட்டை (Line Kjaersfeldt) 21-19, 21-18 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். கியர்ஸ்பெல்ட்க்கு எதிராக சிந்து பெற்ற ஐந்தாவது வெற்றி இது.

இந்த வெற்றி மூலம் 500 வெற்றிகளை பிவி சிந்து பெற்றுள்ளார். சிந்து, 500 ஒற்றையர் வெற்றி மைல்கல்லை எட்டிய ஆறாவது பெண்கள் ஒற்றையர் வீராங்கனை ஆவார். ரட்சனோக் இன்டானான், தாய் சூ யிங், அகேன் யமகுச்சி, கரோலினா மரின், பெட்யா நெடெல்செவா ஆகியோர் இச்சாதனையைப் படைத்த மற்றவர்கள். குழு மற்றும் இரட்டையர் வெற்றிகளையும் சேர்த்து சிந்துவின் மொத்த வெற்றிகள் 516.
BWF சுற்றுப்பயணத்தில், சிந்து 456 வெற்றிகள், 227 தோல்விகள் கண்டுள்ளார். உலகின் 13-ம் நிலை சிந்து, அடுத்தச் சுற்றில் உலகின் நான்காம் இடத்தைப் பிடித்திருக்கும் முதல் நிலை வீராங்கனை சென் யு ஃபெயியை (Chen Yu Fei) எதிர்கொள்கிறார். இந்த போட்டி சவாலாக இருக்கும்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஏழாம் நிலை வீரரான லக்ஷயா சென், உலகத் தரவரிசையில் 42-வது இடத்திலுள்ள ஹாங்காங்கின் ஜேசன் குணாவானை 33 நிமிடங்களில் 21-10, 21-11 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.கடந்த வார இந்தியா ஓபனில் காலிறுதிக்கு வந்த லக்ஷயாவுக்கு, அடுத்தப் போட்டி எளிதல்ல. காலிறுதியில் அவர், தாய்லாந்து வீரர் பனிட்சாபோன் தீரராட்ஸகுலை (Panitchaphon Teeraratsakul) தற்போது சந்திக்கவுள்ளார்.