ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது கனவு இலக்கு என்று, அரையிறுதி வெற்றிக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேட்மிண்டன் வீராங்கனை சிந்து கூறியுள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் 31-வது ஒலிம்பிக் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஓகுராவை பிவி சிந்து எதிர்த்து விளையாடினார்.

இந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிவி சிந்து 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் ஓகுராவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் இந்தியாவுக்கு பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேசலில் செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது இலக்கு கனவு என்று கூறியுள்ளார். மேலும் இறுதி போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடுவேன் என்று சிந்து தெரிவித்துள்ளார்.