ஹைதராபாத்: ரியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி வென்ற வீராங்கனை பி.வி சிந்து தங்களது மாநிலத்தை சேர்ந்தவர்கள் என ஆந்திராவும், தெலுங்கானாவும் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், பயிற்சியாளர் கோபிசந்த், "சிந்து" ஒரு இந்தியர் என பதிலளித்துள்ளார்.
கடந்த லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்கு 6 பதக்கங்கள் கிடைத்தன. இந்நிலையில், நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் அதிக வீரர்கள் பங்கு கொள்வது இது தான் முதல்முறை என்ற நிலையில், கடந்த ஒலிம்பிக்ஸை காட்டிலும் இந்தியா இந்த ரியோ ஒலிம்பிக்ஸில் பதக்கங்களை அள்ளி வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்தியாவிற்கு 2 பதக்கங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனாலும் அந்த பதக்கங்கள் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மகளிர் பேட்மிண்டனில் பி.வி சிந்து வெள்ளியும், மகளிர் மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலமும் வென்றனர்.

ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றது இதுவே முதல்முறை என்ற நிலையில், பி.வி சிந்து இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். இதனால் அவர் பாராட்டு மற்றும் பரிசு மழையில் நனைந்து வருகிறார். இவரது வெற்றிக்கு பயிற்சியாளர் கோபிசந்த் அளித்த பயிற்சியும் முக்கிய காரணம்.
ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுவிட்டு ஹைதராபாத் விமான நிலையம் திரும்பியதிரும்பிய பி.வி சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் கோபிசந்தை, ஆந்திரா மற்றும் தெலுங்கான அமைச்சர்கள் வரவேற்றனர்.
நேற்று தெலுங்கான அரசு சார்பில் பி.வி சிந்துவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அம்மாநில துணை முதல்வர் முகமத் அலி கூறியதாவது: சிந்து தெலுங்கானாவின் பெருமை என்றும், சிந்து தெலுங்கானா குறித்து உலகறிய செய்துள்ளார் என்று கூறினார். இதேபோல அம்மாநில உள்துறை அமைச்சர் நரசிம்ஹா ரெட்டி, பி.வி சிந்து தெலுங்கானா பெண் என்று கூறினார்.
இது குறித்து பி.வி சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த்திடம் நிருபர்கள் கேள்விகளை கேட்டனர். அதற்கு பதிலளித்த கோபிசந்த்: பி.வி சிந்துவிற்கு பல்வேறு மாநிலங்கள் ஆதரவளிப்பது மகிழ்சியளிக்கிறது. தற்போது பி.வி சிந்து இந்தியாவைச் சேர்ந்தவர் என்று மட்டுமே என்னால் கூற முடியும் என கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.
வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி சிந்துவிற்கு ரூ.3 கோடி பரிசுத் தொகையாக ஆந்திரா அறிவித்திருந்தது. இதையடுத்து, தெலுங்கானா அரசு ரூ.5 கோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.