பிவி சிந்து வரலாற்று சாதனை.. ஜப்பான் பேட்மிண்டன் தொடரை வென்ற முதல் இந்திய வீராங்கனை என பெருமை
டோக்யோ: ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் அகானே யமகுச்சியை நேர் செட்களில் வீழ்த்தி தனது முதல் சூப்பர் 750 பட்டத்தை வென்று பிவி சிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில், மூன்று முறை உலக சாம்பியனான யமகுச்சியை 21-17, 21-17 என்ற கணக்கில் வீழ்த்திய சிந்து, ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த அவரது பட்டம் வெல்லாத பயணம் முடிவுக்கு வந்தது. இது 2019 உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்குப் பிறகு அவர் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். இதற்கு முன்பு 2024 இல் நடைபெற்ற சையத் மோடி சர்வதேச தொடரில் அவர் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தனது ஆறாவது ஜப்பான் ஓபன் இறுதிப்போட்டியில் விளையாடிய யமகுச்சி, சிந்துவுக்கு எதிராக அண்மைக்காலமாக வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் முழுமையாக நடைபெற்ற எந்தவொரு போட்டியிலும் சிந்து அவரை வீழ்த்தியதில்லை. கடைசியாக 2022 தாய்லாந்து ஓபனில் தான் சிந்து அவரை முழு ஆட்டத்தில் வீழ்த்தியிருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மலேசிய ஓபனில், முதல் ஆட்டத்திற்குப் பிறகு யமகுச்சி காயம் காரணமாக விலகியதால் போட்டி பாதியிலேயே முடிவடைந்தது.
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் சிந்து முழு ஆதிக்கத்தை செலுத்தினார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடியான ஸ்மாஷ்கள் மற்றும் துல்லியமான நெட் பிளே மூலம் ஆட்டத்தின் வேகத்தை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். யமகுச்சி மீண்டு வர முயற்சிக்கும் போதெல்லாம் சிந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுத்தார்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் தங்களுடைய திறனை வெளிப்படுத்தியதால், இதனால், ஒரு புள்ளியை பெறுவதற்கு பல முறை 30 மேல் இறகுபந்தை கீழே விடாமல் ரேலி சாட்கள் சென்றன. சுமார் 50 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் பிவி சிந்து 21க்கு17, 21க்கு17 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இதன் மூலம், 2 ஆண்டுக்கு பிறகு ஒரு தொடரை சிந்து வென்றுள்ளார். அது மட்டும் இல்லாமல் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும் பிவி சிந்துக்கு சொந்தமானது.


Click it and Unblock the Notifications

