கோலால்ம்பூர்: மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே இந்திய வீராங்கனைகள் பிவி.சிந்து, சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வியடைந்தனர். சாய்னா ஜப்பான் வீராங்கனையிடமும், சிந்து சீன வீராங்கனையிடமும் வீழ்ந்தனர்.
மலேசிய ஓபன் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் போட்டிகள் கோலாலம்பூரில் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் சுற்றில் இன்று போட்டியிட்ட இந்தியாவின் சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனை அகானே எமாகுச்சியை எதிர்கொண்டார்.
இதில் முதல் சுற்றை சாய்னா நேவால் 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்து ஆடிய ஜப்பானின் அகானே 13-21, 15-21 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் மற்றொரு போட்டியில் வெள்ளி மங்கை பிவி.சிந்து சீனாவின் சென் யுபெயியை எதிர் கொண்டார். இதில் 21-18 என்ற செட்கணக்கில் முதல் சுற்றை கைப்பற்றிய சிந்து அடுத்த 2 சுற்றுகளை பரிதாபமாக நழுவ விட்டார்.
இதன்மூலம் 21-18, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். அதேநேரத்தில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜய் ஜெயராம் சீனாவின் கியான் பின்னுடன் மோதினார்.
இதில் 21-11, 21-8 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற அஜய் ஜெயராம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகள் முதல் சுற்றிலேயே தோற்றுள்ள நிலையில் அஜய் ஜெயராம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருப்பது ஆறுதலை அளிக்கிறது.