எல்லாரும் என்னை சில்வர் சிந்து-ன்னு கூப்பிட ஆரம்பிச்சது அவநம்பிக்கையை தந்தது
ஐதராபாத் : தன்னை எல்லாரும் சில்வர் சிந்துன்னு அழைக்க ஆரம்பித்ததால், கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதில் தனக்கு தயக்கமும் உளைச்சலும் ஏற்பட்டதாக பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்சில் தான் வெள்ளிப்பதக்கம் வென்றது முதல் தொடர்ச்சியாக வெள்ளி பதக்கங்களையே பெற்றதால், தனக்கு இறுதிப்போட்டியை எதிர்கொள்வதில் போபியா உள்ளதாக அனைத்து தரப்பினரும் கூறியதாகவும் சிந்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து யார் தன்னைப் பற்றிய விமர்சனத்தை மேற்கொண்டாலும் அதுகுறித்து கவலை கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தான் தீர்மானித்ததாகவும் சிந்து குறிப்பிட்டுள்ளார்.

பட்டத்தை வென்ற பிவி சிந்து
சர்வதேச அளவில் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருபவர் பிவி சிந்து. ஒலிம்பிக்சிலும் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவை பெருமை கொள்ள செய்த சிந்துவிற்கு கடந்த 2012ல் சீனாவில் நடைபெற்ற தொடர் ஒன்றில் அப்போதைய ஒலிம்பிக் சாம்பியன் லீ ஜூருய்யை வென்றது திருப்புமுனையாக அமைந்தது.

'சில்வர் சிந்து' என்ற பட்டப்பெயர்
கடந்த 2016ல் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார் சிந்து. அதற்கு முன்பு மற்றும் பின்பும் பல்வேறு தொடர்களில் அவர் வெள்ளிப் பதக்கங்களையே வென்றார். 2017ல் மட்டுமே தான் 8 வெள்ளிப் பதக்கங்களை பல்வேறு போட்டிகளில் வென்றதாகவும் இதையடுத்து பல்வேறு தரப்பினரும் 'சில்வர் சிந்து' என்று தன்னை அழைக்க துவங்கியதாகவும் அவர் கூறினார்.

மனஉளைச்சல் ஏற்பட்டது
பிவி சிந்துவிற்கு இறுதிப்போட்டிகளை எதிர்கொள்வதற்கு ஒருவித போபியா உள்ளதாகவும், அவரால் இறுதிப்போட்டிகளில் வெற்றி கொள்வது என்பது மிகவும் கடினம் என்றும் அவர்குறித்த விமர்சனங்கள் எழுந்தன. இதனால் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும்போது மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும் சிந்து தெரிவித்துள்ளார்.

100 சதவிகித உழைப்பு
சில்வர் சிந்து என்ற தன்னை குறித்த விமர்சனம் அவ்வப்போது தனக்கு மனஉளைச்சலை தந்த போதிலும், எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் ஆட்டத்தில் தன்னுடைய 100 சதவிகித உழைப்பை கொடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி கொண்டதாக பிவி சிந்து தெரிவித்துள்ளார். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி வரை வருவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்பது மக்களுக்கு தெரியாது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications