ரியோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் சரித்திரம் படைத்துவிட்டார் இந்தியாவின் பி வி சிந்து. நாளைய இறுதிப் போட்டியில் அவர் வெற்றி பெற்றால் புதிய வரலாறு படைப்பார்.
ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஓகுராவை பிவி சிந்து இன்று எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பதக்க வேட்கையுடன் அற்புதமாக ஆடினார் சிந்து.

முதல் செட்டை 21-19; 2-வது செட்டை 21-10 என்ற புள்ளிகளில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துவிட்டார் சிந்து. நாளை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டியில் உலகின் முதலாம் நிலை வீராங்கனையான ஸ்பெயின் மரினுடன் மோதுகிறார் சிந்து.
இதுவரை இந்தியா ஒலிம்பிக் பேட்மிண்டனில் இறுதிப் போட்டிக்கு வந்ததே இல்லை. முதல் முறையாக அதைச் சாதித்துள்ளார் சிந்து. கூடவே தங்கத்தையும் வென்று விட்டால் மிகப் பெரிய வரலாறாக அது மாறி விடும்.
வெள்ளி வேண்டாம், தங்கம் வேண்டும், சிந்து வெல்வார் என்ற குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கி விட்டன. பார்க்கலாம் சிந்து தங்க மங்கை ஆவாரா என்று.