ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள பி.வி.சிந்து இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுடன் மோதவுள்ளார்.
மரின் நேற்று நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையை அசத்தலாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியவர் ஆவார்.

இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது.
முன்னதாக நேற்று நடந்த 2வது அரை இறுதிப் போட்டியில் ஜப்பானின் நஸோமி ஒகுஹராவை 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.
இன்று சிந்து சந்திக்கப் போகும் மரின் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்பதால் போட்டி கடுமையாகவே இருக்கும். நேற்றைய ஆட்டத்தில் கரோலினா புயல் போல ஆடி சீன வீராங்கனையை நிலை குலைய வைத்து விட்டார்.
இருப்பினும் முதல் முறையாக இந்தியா பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பதால் தனது முழு பலத்தையும் காட்டி தங்கப் பதக்கம் வெல்ல பி.வி.சிந்து நிச்சயம் முயற்சிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.