ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை இந்தியாவில் இருந்து அதிகமான விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதனால் பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தொடர்ந்து இந்திய வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதனால் இந்தியா இன்னும் ஒரு பதக்கம் கூட பெறவில்லை.
இந்நிலையில், பேட்மிண்டனில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மகளிர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தைவான் வீராங்கனையை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-13, 21-15 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். காலிறுதியில் அவர் சீன வீராங்கனை யிஹான் வாங்கை எதிர்த்து விளையாடவுள்ளார்.
இதேபோல், ஆடவர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க் வீரர் ஜான் ஓ ஜோர்ஜென்ஸனை எதிர்த்து ஸ்ரீகாந்த் விளையாடினார். விறுவிறுப்பு நிறைந்த இந்தப்போட்டியில் ஸ்ரீகாந்த் 21-19, 21-19 என்ற நேர்செட்களில் வெற்றியை வசமாக்கினார். காலிறுதியில் சீனாவின் லின் டானை எதிர்த்து ஸ்ரீகாந்த் விளையாடவுள்ளார்.
சிந்து, ஸ்ரீகாந்த் மூலமாவது இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.