சென்னை: விஜயவாடாவில் நடைபெற்ற சீனியர்களுக்கான தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், 22 வயதான தமிழக வீரர் ரித்விக் சஞ்சீவி தனது முதல் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். இப்பட்டத்தை வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில், தரவரிசையில் இல்லாத ரித்விக், பாரத் ராகவை 21-16, 22-20 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார்.
இது குறித்து பேசிய ரித்விக், "மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். என் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இது 17 வயதுக்குட்பட்ட பட்டம் வென்ற பிறகு நான் பெற்ற முதல் சீனியர் தேசியப் பட்டம்," என்று தெரிவித்தார். அரையிறுதியில் முதல்நிலை வீரரான கேரளாவின் கிரண் ஜார்ஜை வென்றதை "என் வாழ்க்கையின் சிறந்த வெற்றிகளில் ஒன்று" என அவர் குறிப்பிட்டார்.

லீக் பிரிவில் முன்னாள் உலக நம்பர் 1 ஸ்ரீகாந்தையும் அவர் தோற்கடித்தார். ரித்விக்கின் இந்தப் பயணம் எளிதானதல்ல. கடந்த ஆண்டு பெங்களூரில் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர், மனரீதியான சவால்களை எதிர்கொண்டார். விளையாட்டு மனநல நிபுணர் உதவியுடன் மீண்டும் கவனம் பெற்றார்.
இது குறித்து பேசிய ஹட்சன் பேட்மிண்டன் மைய தலைமைப் பயிற்சியாளர் பி. ரஜினிகாந்த், "ரித்விக் காற்றின் திசை மாறும்போது தடுமாறுவார். துல்லியத்தையும் பொறுமையையும் மேம்படுத்த பணியாற்ற வேண்டும். அவர் படிப்படியாக முன்னேறி வருகிறார்."
தற்போது உலக தரவரிசையில் 88-ல் இருக்கும் ரித்விக், 2026 இறுதிக்குள் முதல் 20 இடங்களுக்குள் வர இலக்கு வைத்துள்ளார். அதிக BWF சூப்பர் 300+ போட்டிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார். "நம்பிக்கை ஒருபோதும் கைவிடக்கூடாது. எத்தனை முறை தோற்றாலும் அல்லது வென்றாலும்" என்பதே தமது தாரக மந்திரம் என்றும் அவர் கூறியுள்ளார்.