நான்ஜிங்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு இந்தியாவின் சாய்னா நெஹ்வால் முன்னேறினார். தொடர்ந்து 8வது முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங்கில் நடந்து வருகின்றது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முன்னேறினார் உலகத் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்னா நெஹ்வால்.
நேற்று நடந்த மூன்றாவது சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின் ரட்ச்னோக் இனடோனை சந்தித்தார் சாய்னா. இதில் 21-16, 21-19 என்ற செட்களில் அபாரமாக வென்றார் சாய்னா. காலிறுதியில் மிகவும் வலுவான தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஸ்பெயினின் கரோலினா மரினை சந்திக்கிறார்.
இதன் மூலம் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு தொடர்ந்து 8வது முறையாக முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை சாய்னா பெற்றுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு மகளிர் ஒற்றையரில் பிவி சிந்து, ஆடவர் ஒற்றையர் பிரிவில் பி. சாய் பிரனீத் ஆகியோரும் முன்னேறியுள்ளனர்.
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ராங்கிரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடியும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.