ஜகார்தா: இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் சாய்னா நேவால்.
ஜகாதாவில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஹீ பிங்ஜியோவுடன் மோதினார் சாய்னா. இப்போட்டியில் 18-21, 21,12, 21-18 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையைத் தோற்கடித்தார் சாய்னா.
பிங்ஜியோவும், சாய்னாவும் நேருக்கு நேர் மோதியது இதுவே முதல் முறையாகும். முதல் போட்டியிலேயே தனது முத்திரையை அழுத்தம் திருத்தமாக பதித்தார் சாய்னா.
உலக அளவில் சாய்னா 8வது இடத்தில் இருக்கிறார். ஆனால் பிங்ஜியோ 6வது இடத்தில் இருக்கும் முன்னணி வீராங்கனை ஆவார்.
இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ள சாய்னா, இறுதிப் போட்டியில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரீன் அல்லது சீனாவின் சென் யூபி ஆகியோரில் ஒருவருடன் மோதுவார். இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.