ஷாங்காய் : சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
இன்று நடந்த மகளிர் ஒற்றையர் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் தென் கொரியாவின் சுங் ஜி ஹ்யுன் மோதினர்.
ஆட்டத்தின் துவக்கத்தில் சாய்னா நேவால் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், முதல் கேமின் பிற்பகுதியில் சுங் ஜி கடும் சவால் அளித்தார். முதல் கேமின் இறுதியில் சாய்னா 22-20 என போராடி வெற்றி பெற்றார்.
அடுத்த இரண்டாவது கேமில், சாய்னா நேவால் மிக மோசமாக ஆடினார். எந்த வகையிலும் ஆதிக்கம் செலுத்தாத அவர், 8-21 என மோசமாக இரண்டாம் கேமை இழந்தார்.
மூன்றாவது கேமில் சாய்னா சுதாரிக்க நினைத்தாலும், சுங் ஜி அதிரடியாக ஆடினார். இறுதியில் சாய்னா நேவால் 22-20, 8-21, 14-21 என்ற கேம் கணக்கில் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். இதனால், சீன ஓபன் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளார் சாய்னா. மற்ற இந்திய வீரர்கள் சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்கள் முதல் சுற்றுப் போட்டிகளில் அடுத்து ஆட உள்ளனர்.
சாய்னா நேவால் சமீப காலமாக பெரிய வெற்றிகளை பெறாமல் இருந்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்றார். அதை தொடர்ந்து அவர் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் ஆடுவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.