டெல்லி: பத்ம பூஷன் விருதுக்கு தமது பெயரை ஏன் பரிந்துரை செய்யவில்லை என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு சிறப்பு அந்தஸ்தின் அடிப்படையில் பத்மபூஷன் விருதினை வழங்க விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இந்த விருது விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கிடைத்த பின் பத்ம பூஷன் விருதுக்கு தான் விண்ணப்பித்தாகவும், ஆனால் 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை என்று காரணத்தை கூறி நிராகரித்த அவர்கள் எந்த காரணத்தைக்கூறி 2011ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வென்ற சுஷில் குமாரின் பெயர் பரிந்துரை செய்துள்ளனர் என்று சாய்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது பெயர் பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்படதாதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றுள்ள சாய்னா நேவாலுக்கு பத்ம பூஷன் விருது வழங்க வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு, இந்திய பேட்மிண்டன் சங்கம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.