ஜகார்த்தா : உலக பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
22-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று (வெள்ளி) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், சீனாவைச் சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் வாங் யுஹானை சாய்னா எதிர்கொண்டார்.
இதுவரை இருவரும் 11 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றனர். இதில் வாங் யுஹான் 9 முறையும், சாய்னா 2 தடவையும் வென்றுள்ளனர்.
தொடக்கம் முதலே இருவரது ஆட்டத்திலும் அனல் பறந்தது. முதல் செட்டை சாய்னா கைப்பற்ற இரண்டாவது செட்டை வாங் தன்வசமாக்கினார். 3 வது செட்டைக் கைப்பற்ற இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
முடிவில் 3 வது செட்டை சாய்னா பறித்துக்கொண்டார். அவர் 21-15, 19-21, 21-19 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை வாங் யுஹானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
உலக பேட்மிண்டன் போட்டியை பொறுத்தவரையில் சாய்னாவுக்கு பதக்கம் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. 5 முறை கால் இறுதியுடன் தோல்வி கண்டு வெளியேறி இருக்கும் சாய்னா காலிறுதியில் வென்றதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.