நான்ஜிங்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் மற்றும் சாய் பிரனீத் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதே நேரத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் மூன்றாவது சுற்றில் வெளியேறி ஏமாற்றத்தை தந்தார்.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங்கில் நடந்து வருகின்றது.
இதில் மகளிர் ஒற்றையரில் சாய்னா நெஹ்வால் காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார். இன்று நடந்த மூன்றாவது சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின் ரட்ச்னோக் இனடோனை சந்தித்தார் சாய்னா. இதில் 21-16, 21-19 என்ற செட்களில் அபாரமாக வென்றார் சாய்னா. காலிறுதியில் மிகவும் வலுவான தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கரோலினா மரினை சந்திக்கிறார்.
மகளிர் ஒற்றையரில் நடைபெறும் மற்றொரு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் பிவி சிந்து விளையாட உள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் பி. சாய் பிரனீத் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடந்த மூன்றாவது சுற்று ஆட்டத்தில் 21-13, 21-11 என்ற செட்களில் டென்மார்க்கின் சோல்பர்க் விட்டின்கஸை வென்றார் பிரனீத். காலிறுதியில் ஜப்பானின் கென்டோ மோமோடாவை அவர் சந்திக்கிறார்.
அதே நேரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிடாம்பி ஸ்ரீகாந்த் ஏமாற்றம் அளித்தார். மூன்றாவது சுற்றில் மலேசியாவின் லியூ டாரனிடம் 21-18, 21-18 என்ற செட்களில் போராடி தோல்வியடைந்தார் ஸ்ரீகாந்த்,
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ராங்கிரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடியும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடந்த மூன்றாவது சுற்று ஆட்டத்தில் இந்திய ஜோடி 20-22, 21-14, 21-6 என்ற செட்களில் மலேசியாவின் கோ சூன் ஹூவாட், ஜெமி லாய் ஜோடியை வென்றது.