ஜகார்த்தா : இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தன்னுடன் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் மோதி, காயம் காரணமாக பாதியில் விலகிய கரோலினாவுக்கு ஆறுதல் கூறி நெகிழ வைத்துள்ளார்.
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் ஸ்பெயினின் கரோலினா மரின் மோதினர். இந்த ஆட்டத்தின் முதல் கேமில் கரோலினா ஆதிக்கம் செலுத்தி ஆடி வந்தார்.
கரோலினா 9-2 என முன்னிலையில் இருக்கும் போது அவருக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. அந்த வலியோடு சிறிது நேரம் ஆடிய கரோலினா 10-4 என முதல் கேம் இருந்த போது, கண்ணீருடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால், சாய்னா இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார். எனினும், கரோலினாவுக்கு ஏற்பட்ட காயத்துக்கு ஆறுதல் கூறி அவரை தேற்றினார்.
தன் சமூக வலைதள பக்கத்தில், கரோலினாவுக்கு ஆறுதல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இது போன்ற ஒரு காயம் இறுதிப் போட்டியில் ஏற்படுவதை தான் விரும்பவில்லை என்றும், மகளிர் பாட்மிண்டனின் சிறந்த வீராங்கனை கரோலினாவுக்கு இது போல நேர்ந்தது துரதிர்ஷ்டமானது என தெரிவித்துள்ளார். அவர் விரைவில் மீண்டு வர தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
களத்தில் எதிரியாக இருந்தாலும், வெளியே கரோலினாவுக்கு ஆறுதல் அளித்த சாய்னாவின் செயலுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.