உலக பேட்மிண்டன்: சாதனையை நழுவ விட்டார் சாய்னா.. இறுதிப் போட்டியில் தோல்வி
ஜகார்த்தா: உலக பேட்மிண்டன் சாம்பின்ஷிப் பட்டத்தைப் பெறும் வாய்ப்பை சாய்னா நேஹ்வால் நழுவ விட்டுள்ளார். இறுதிப் போட்டியில் அவர் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மெரினுடன் போராடி தோல்வியைத் தழுவினார்.
இதில் வென்றிருந்தால் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை, சாதனையைப் படைத்திருப்பார்.
இருப்பினும் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் இந்த பதக்கத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை சாய்னாவுக்குக் கிடைத்துள்ளது.

நிறைவேறாத கனவு
இந்தப் பட்டத்தை வென்று தங்கம் வெல்வேத சாய்னாவின் நிறைவேறாத ஒரே கனவாக இருந்து வந்தது. தற்போதும் அது கை கூடாமல் போயுள்ளது. இருப்பினும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை பதக்கம் வெல்லாமல் இருந்து வந்த சாய்னா தற்போது முதல் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

பதக்கம் வென்ற 4வது வீராங்கனை
இதற்கு முந்தைய போட்டிகளில் பி.வி.சிந்து, ஜுவாலா கட்டா - அஸ்வினி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். இந்த வரிசையில் தற்போது சாய்னாவும் சேர்ந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

விறுவிறுப்பான இறுதிப் போட்டி
இன்று நடந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. உலகின் நம்பர் 2 வீராங்கனையான சாய்னாவை, நம்பர் 1 வீராங்கனையான கரோலினா தனது அபார திறமையால் சாய்த்து விட்டார்.

நேரடி செட்களில் தோல்வி
சாய்னாவை, கரோலினா, 21-16, 21-19 என்ற நெர் செட்களில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். போட்டியின்போது சாய்னாவை விட கரோலினாவுக்கே ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருந்தது.

ஜுவாலா கட்டா வாழ்த்து
சாய்னா வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு இன்னொரு இந்திய வீராங்கனையான ஜுவாலா கட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெருமையான தருணம்
இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டிருந்த செய்தியில், இது மிகவும் கடினமான அதிர்ஷ்டம். இந்தியாவுக்கும், சாய்னாவுக்கும் முதல் வெள்ளிப் பதக்கம். இந்திய பேட்மிண்டனுக்கு பெருமையான தருணம் என்று பாராட்டியுள்ளார் ஜுவாலா கட்டா.


Click it and Unblock the Notifications