உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்... காலிறுதியில் சாய்னா தோல்வி!
நான்ஜிங்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார். தொடர்ந்து 8வது முறையாக காலிறுதிக்கு நுழைந்து சாதனைப் படைத்த அவர் பதக்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங்கில் நடந்து வருகின்றது.

அதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதியில், ஸ்பெயினின் கரோலினா மரினைச் சந்தித்தார் சாய்னா நெஹ்வால். உலகத் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள சாய்னா நெஹ்வால் 6-21, 11-21 என தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள மரினிடம் தோல்வியடைந்தார்.
தொடர்ந்து 8வது முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு நுழைந்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் சாய்னா நெஹ்வால். இதற்கு முன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2017ல் வெண்கலம் வென்றார். 2015 பைனலில் இதே மரினிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார் சாய்னா.
இந்த ஆட்டத்தின் மூலம், இதுவரை இருவரும் சந்தித்த 10 ஆட்டங்களில் தலா 5 ஆட்டங்களில் இருவரும் வென்றுள்ளனர்.
முன்னதாக கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ராங்கிரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.
தற்போதைய நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பி. சாய் பிரனீத், மகளிர் ஒற்றையர் பிவி சிந்து ஆகியோர் காலிறுதியில் விளையாட உள்ளனர்.


Click it and Unblock the Notifications