இந்தியாவில் பேட்மிண்டனை வளர்த்தவர் இவர்தான்.. சாதனைகளை அள்ளிக் குவித்த சாய்னா நேவால்!
டெல்லி : இந்தியாவில் பேட்மிண்டன் துறையில் பெண்கள் பெரிய அளவில் சாதிக்க முடியும் என பத்து ஆண்டுகளுக்கு முன்பு உணர்த்தியவர் சாய்னா நேவால்.
2006இல் சர்வதேச பேட்மிண்டன் அரங்கில் காலடி வைத்தவர், 2009இல் மகளிர் தரவரிசையில் உலக அளவில் இரண்டாம் இடம் பிடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
நடுவே அந்த இடத்தை தவறவிட்டாலும் 2015இல் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து வரலாறு படைத்தார்.

முதல் இடம்
பேட்மிண்டன் அரங்கில் இந்தியாவின் பிரகாஷ் படுகோனே தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த முதல் வீரர். அவருக்கு பின் சாய்னா நேவால் அந்த சாதனையை செய்து இருந்தார். மகளிர் பிரிவில் அந்த சாதனையை செய்த முதல் இந்திய வீராங்கனை அவர் தான்.

ஒலிம்பிக்
ஒலிம்பிக் அரங்கில் மூன்று முறை பங்கேற்றுள்ள சாய்னா நேவால் அதில் இரண்டாவது முறை வெண்கலம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் விளையாட்டில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் சாய்னா நேவால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த்
காமன்வெல்த் போட்டிகளில் மூன்று முறை பங்கேற்று ஒரு வெண்கலம், இரண்டு தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் இரண்டு தனிநபர் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் செய்து இருந்தார்.

முக்கிய தொடர்களில் பதக்கம்
காமன்வெல்த் யூத் கேம்ஸில் ஒரு வெள்ளி, ஒரு தங்கம் வென்றுள்ளார். உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் அனைத்து முக்கிய தனிநபர் தொடர்களிலும் ஒரு பதக்கமாவது வென்ற ஒரே இந்தியர் சாய்னா நேவால் மட்டுமே.

விருதுகள்
இந்தியாவில் பேட்மிண்டன் புகழ் பரவ முக்கிய காரணம் சாய்னா நேவால் தான். அவரது சிறப்பை பாராட்டி இந்திய அரசு 2016இல் பத்மபூஷண் விருது அளித்தது. அவர் அர்ஜுனா விருது மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications