இந்தியா ஓபன் தொடரில் இருந்து வயிற்று வலி காரணமாக சாய்னா நேவால் விலகல்!!
டெல்லி : இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார்.
சாய்னா நேவாலுக்கு கடும் வயிற்று வலி இருப்பதால், மருத்துவரின் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரில் இருந்தே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் சாய்னா.

அடுத்து சுவிஸ் ஓபன் தொடரில் ஆட இருந்த நிலையில், வயிற்று வலி காரணமாக அவர் ஆடவில்லை. பின்னர் இந்தியா வந்து பரிசோதித்த போது குடல் மற்றும் கணைய அழற்சி ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதனால், சுவிஸ் ஓபனை தொடர்ந்து இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இருந்தும் விலகி உள்ளார் சாய்னா. கடந்த 2015ஆம் வருடம் சாய்னா இந்தியா ஓபன் தொடரில் மகளிர் ஒற்றையர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, பிவி சிந்து மட்டுமே இந்தியா ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க உள்ளார். அவரும் இந்தியா ஓபன் தொடரை முன்பு வென்றுள்ளதால், இந்த முறையும் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications