ஜகார்த்தா : உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சாய்னா நேவால் முன்னேறியுள்ளார்.
இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் பங்கேற்று விளையாடி வருகிறார்.
உலகத் தரநிலையில் 2 ஆம் இடத்தில் உள்ள சாய்னா, "பை" வாய்ப்பு மூலம் நேரடியாக இரண்டாம் சுற்றில் விளையாட தகுதி பெற்றார். நேற்று நடைபெற்ற 2 ஆம் சுற்று ஆட்டத்தில், தர வரிசையில் மிகவும் பின்தங்கியிருக்கும் ஹாங்காங் வீராங்கனை ஷியுங் கன் யீ என்ற வீராங்கனையை அவர் எதிர்கொண்டார்.
34 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 21-13, 21-9 என்ற நேர்செட்களில் சாய்னா வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மார்ச் மாதம் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியபோது சாய்னாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அந்தப் போட்டியில் அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்த சாய்னா, உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கி உள்ளார்.
இந்த போட்டியில் இதுவரை அவர் காலிறுதி சுற்றைத் தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் ஒற்றையர் போட்டியில், இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப் வியட்நாம் வீரரிடம் தோல்வியடைந்தார்.