டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே என் லட்சியம் என்று தெரிவித்துள்ளார் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால்.
சமீபத்தில் நடந்த உலக பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், அடுத்த ஆண்டு ரியோடி ஜெனீரோவில் ஆகஸ்டு 5 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வேட்கையுடன் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் உலக பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சாய்னா நேவால், "இந்த மாதம் நடைபெறும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நான் பங்கேற்கிறேன். இந்த போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை வீழ்த்துவதுடன், சாம்பியன் பட்டத்தையும் வெல்ல வேண்டும் என்பதை எனது இலக்காக வைத்து இருக்கிறேன்.
ஆல் இங்கிலாந்து மற்றும் உலக போட்டியின் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரினிடம் நான் தோல்வி கண்டேன். ஜப்பான் ஓபன் போட்டியில் அவரை வீழ்த்த வழி கண்டுபிடித்து அவரை வெல்வேன். கடந்த சில மாதங்களில் ஏறக்குறைய உலகின் எல்லா முன்னணி வீராங்கனைகளையும் வென்று இருக்கிறேன். இந்த முறை கரோலினாவை வெல்ல வேண்டும் என்பது எனது குறிக்கோளாகும்.
பயிற்சியாளர் விமல்குமார் மேற்பார்வையில் பெங்களூருவில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். தற்போதையை சூழ்நிலையில் எனக்கு எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு இருக்கிறது. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுடன் முன்னணி வீராங்கனைகளுக்கு எதிராக தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது முக்கியமானதாகும். ஆட்டத்தில் தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
ஒலிம்பிக் போட்டி மிகவும் கடினமானதாக இருக்கும். எல்லோரும் ஒலிம்பிக் போட்டிக்காக மிகவும் கடினமாக தயாராகுவார்கள். ரியோடிஜெனீரோவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல முயற்சிப்பேன். ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே எனது கனவாகும்.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றேன். இந்த முறை அதனை விட முன்னேற்றம் காண வேண்டும் என்று விரும்புகிறேன். எனது வாழ்க்கையில் பயிற்சியாளர் விமல்குமார் ஒரு மீட்பர் போன்றவர். இந்த ஆண்டில் அவரிடம் பயிற்சி மேற்கொண்டதில் இருந்து நான் அதிக தன்னம்பிக்கை பெற்று இருக்கிறேன். தற்போது நான் பாதுகாப்பான நபரின் கையில் இருப்பதாக உணருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.